*அநியாயத்தின் திரவியங்கள் ஒன்றுக்கு உதவாது (நீதி 10:2)*
---------------------------------------------------
சில வருடங்களுக்கு முன்பு ஒரு நாள் சென்னையிலிருந்து "சேரன் எக்ஸ்பிரஸ்" ரயிலில் நான் கோவை வந்து கொண்டிருந்தேன். இரவில் படுக்கைக்கான இட வசதி எனக்கு கிடைக்கவில்லை. உட்கார்ந்து வருவதற்கான இடம் மட்டுமே கிடைத்தது. ரயில் அரக்கோணம் வரவும் எனது ரயில் பெட்டியின் கண்டக்டர் என்னிடம் ரூபாய் 20/- வாங்கி கொண்டு நான் படுத்துக் கொள்ளுவதற்கு இடம் ஒதுக்கிடு செய்து கொடுத்தார். வாங்கிய பணத்திற்கான ரசீது பின்னர் கொண்டு தருவதாக சொன்ன அவர் இரவு முழுவதும் தரவே இல்லை. அடுத்த நாள் காலையிலும் ரசீது தரவில்லை. நான் அந்த மனிதனை தேடி சென்றேன்.
நான் வருவதை கண்ட அந்த ரயில் பெட்டியின் கண்டக்டர் தனது சட்டை பையிலிருந்து முந்தின இரவு ருபாய் 20/- என்னிடம் பெற்றதற்கான ரசீதை எடுத்து "நீங்கள் கொடுத்த பணத்திற்கான ரசிது. நேற்றே எழுதி வைத்து விட்டேன். உங்களை தூக்கத்தில் எழுப்பி தொந்தரவு செய்யக்கூடாது என்ற காரணத்திற்காக அப்படியே என் வசம் வைத்துக் கொண்டேன்" என்று கூறினார்.
அவருடைய கடமைபற்று நிறைந்த நேர்மையான செயலால் உள்ளம் மகிழ்ந்த நான் அவருக்கு இரட்சகர் இயேசுவை அறிமுகபடுத்தினேன். என்னுடைய வார்த்தைகளால் கவரப்பட்ட அவர் தன்னுடைய வார்த்தைகளை தொடர்ந்தார். "ரயிலில் பயணம் செய்யும் பொது மக்களிடம் கையூட்டு பணங்களை பெற்று அவர்களுக்கு இடவசதி கொடுப்பதை அடியோடு வெறுப்பவன் நான். காரணம் முதலாவது அது அரசாங்கத்தை ஏமாற்றி அதற்கு நஷ்டத்தை கொண்டு வருவதாகும், அடுத்த முக்கியமான காரணம், அப்படி சம்பாதிக்கும் பணம் ஒன்றுக்கும் பயன்படாமல் போவதுடன் வேதனையைதான் கொண்டு வரும் என்பதை முழுக்க முழுக்க அறிந்தவன் நான். இதே சென்னை கோவை ரயில் வழித்தடத்தில் என்னோடு வேலை பார்க்கும் ஒரு நண்பன் எனக்குண்டு (அவன் கையூட்டு பணம் பெற்று வாழ்ந்தவன், அவனது பணம் எப்படி பாழாய் போனது என்பதையும் எனக்கு சொன்னார்) அவன் தன்னுடைய இரும்பு பெட்டியை (இரும்பு பெட்டிக்குள் அரசாங்க பணம் மற்றும் ரசீது புத்தகங்கள் மற்றும் ரயில்வே தஸ்தாவேசுகள் இருக்கும்) எப்பொழுதும் இரட்டை சங்கிலி போட்டு ஒரு பலமான கம்பியுடன் இணைத்து கட்டியிருப்பான். எந்த திருடனும் அதை தீண்ட இயலாது. அன்றெரு நாள் அவன் தனது கவனக் குறைவால் தனது இரும்பு பெட்டியை சங்கிலியால் இணைத்து கட்ட மறந்து விட்டான். அவ்வளவுதான், திருப்பூருக்கு ரயில் வந்தபோது அவனது பெட்டியை திருடன் தந்திரமாக எடுத்துக் கொண்டு நழுவி விட்டான். அந்த பெட்டியில் அரசாங்கத்திற்கு சேர வேண்டிய பணம் 45000 மும், அவனது சொந்த பணம் 60000 மும் இருந்தது. அனைத்தையும் பொடிப் பொழுதில் இழந்தான். அநியாயமாய் சம்பாதித்தது அநியாயமாய் போனது என்று கூறினார்.
மேலும் அவர் கூறினார் "நான் எந்த சூழ்நிலையிலும் ஒரு பைசா கூட ரயில் பயணிகளிடம் கை லஞ்சம் வாங்குவதே இல்லை. பணக் கஷ்டங்கள் எனக்கு எத்தனையோ இருந்த போதிலும் அநியாயமாய் நான் அரசாங்கத்தை வஞ்சித்து பணம் சம்பாதிப்பதை கொஞ்சமும் விரும்பவில்லை. அதை நான் மனதால் நினைத்தும் பார்க்கவில்லை" என்று சொன்னார்.
தேவ ஜனமே, மேலே நான் குறிப்பிட்ட மனிதன் ஒரு இந்து ஆவார். அவரது பெயரை நான் இங்கு குறிப்பிட விரும்பவில்லை. ஜீவனுள்ள தேவனை அறியாத புற மதஸ்தன் அத்தனை தூய்மையாக தன் கரங்களை பரிசுத்தமாக பாதுகாக்கின்றான். ஆனால் இரட்சா பெருமானை பறைசாற்றும் மற்றும் பெரிய பொறுப்பான கிறிஸ்த பதவிகளில் இருப்போர் லட்சக்கணக்கான ரூபாய்களை லஞ்சமாக பெற்று வேலை போட்டு கொடுப்பது, உத்தியோக உயர்வு அளிப்பது, இடமாற்றம் செய்வது எல்லாம் சற்றும் தெய்வ பயம் இல்லாமல் துணிந்து தாராளமாக செய்கின்றனர். தைரியமாக வாய் திறந்து லஞ்சம் கேட்டு பெறுகின்றனர். அநேக தேவ ஊழியர்கள் பரிசுத்தமான தேவ ஊழியத்தை லோக ஆதாயத்தை மையமாக வைத்து உலகத்தின் மற்ற தொழில்களில் ஒன்றைப் போன்று செய்கின்றனர். அதின் மூலம் சொகுசான வாழ்வைத் தேடுகின்றனர். கிறிஸ்தவ வியாபாரிகள் கள்ள தராசு, கள்ள படி, அரசாங்கத்தை ஏமாற்றும் இரட்டை கணக்கு போன்றவற்றை கையாளுகின்றனர். வியாபாரத்தினிமித்தம் பொய்களை தாராளமாக பேசுகின்றனர். அநேக உபாய தந்திரங்களை கடைபிடிக்கின்றனர். இவை எல்லாம் அநியாயத்தின் திரவியங்களாகும். இவை எல்லாம் ஒன்றுக்கும் உதவாது. கண்மூடி திறப்பதற்குள் இப்படி சம்பாதித்தவை அனைத்தும் தங்களுக்கு செட்டைகளை உண்டு பண்ணிக் கொண்டு ஆகாய மார்க்கமாக பறந்து மறைந்து விடும் (நீதி 23:5)
எப்போழுதும் நினைவில் வையுங்கள். "அநியாயத்தின் திரவியங்கள் ஒரு செல்லாக் காசுக்கும் உதவாது".
No comments:
Post a Comment