கிறிஸ்தவ மார்க்கம் அத்தனை எளிதான மார்க்கம் அல்ல..
கிறிஸ்தவ மார்க்கம் ஒருவனை மிகவும் எளிதான விதத்தில் இன்ப பரலோகம் கொண்டு சேர்க்கும் மார்க்கம் என்று அநேக கிறிஸ்தவர்கள் வீண் கற்பனை உலகில் ஜீவித்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களுடைய கற்பனைக்கு தோளோடு தோள் கொடுத்து உதவும் வகையில் அவர்களுடைய குருவானவர்களும், பாஸ்டர்களும் கூட அவர்களோடு சேர்ந்து ஜாலரா தட்டி வருகின்றார்கள். காலமெல்லாம் குடித்து வெறித்து பாவத்தில் வாழ்ந்த ஒரு கிறிஸ்தவ மனிதன் குடிவெறி போதையில் லாரியில் விழுந்து அடிபட்டு மருத்துவமனையில் சேர்க்கப்படுகின்றான். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மனிதன் சிகிச்சை பயன் பெறாமல் சில தினங்களுக்குள் மரிக்கிறான். கல்லறை தோட்டத்தில் அந்த குடிகார மனிதனுக்காக ஏறெடுக்கப்படும் இறுதி ஜெபத்தை கவனியுங்கள் "ஆண்டவரே உமது அடியாரை அவருடைய கடைசி நாட்களில் அன்போடு அடித்து, சிட்சித்து அவரை உமது இராஜ்யத்துக்கு தகுதிப்படுத்தி உம்மண்டை அழைத்து கொண்டதற்காக நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகின்றோம். உமது அடியான் வந்தடைந்த அந்த பரம இளைப்பாறுதலுக்கு நாங்களும் உம்மால் குறிக்கப்பட்ட நேரம் வந்து சேர எங்களை ஆயத்தப்படுத்தும்" என்று சபையின் குருவானவர் ஜெபித்து அந்த ஆத்துமாவை மோட்சத்திற்கு பச்சை விளக்கை காண்பித்து அனுப்பி வைக்கின்றார்.
குருவானவரின் மன்றாட்டின்படி அத்தனை எளிதில் இன்ப கானானும், மோட்சானந்த மகிமைகளும் கிடைத்து விடாது. உலகத்தின் மக்களை போல வாரத்தின் ஆறு நாட்களும் எல்லா பாவங்களிலும் ஜீவித்து விட்டு கர்த்தருடைய பரிசுத்த ஓய்வு நாளில் ஆராதனையில் பங்கெடுத்தும் கிறிஸ்தவ பக்தி முயற்சி காரியங்களில் கலந்து கொண்டும் மீண்டும் பாவ சேற்றில் வாரத்தின் ஆறு நாளும் புரண்டு எழுந்து அதே நிலையில் உள்ள ஜீவியத்தில் ஒரு நாள் பரலோக நாட்டிற்கு பாஸ்டரோ அல்லது ஆயரோ கல்லறை தோட்டத்தின் மேட்டில் நின்று பச்சை கொடி காட்டியதும் பாடிப் பறந்து இயேசுவின் பொன் முகம் தரிசிக்க செல்லுவேன் என்பது எல்லாம் வெறும் பகற் கனவாகும்.
அநேக கிறிஸ்தவர்கள் நினைப்பது போல பரலோகம் அத்தனை எளிதில் நமக்கு கிடைத்து விடாது. பரலோகத்தை சுதந்தரிக்க பாடுகளும், பிரயாசங்களும், தியாகங்களும், சுய வெறுத்தல்களும் ஏராளம் தேவை.
மேற்கண்ட காரியங்கள் எல்லாவற்றையும் செய்து எல்லாரும் பரலோகத்திற்கு செல்லமாட்டார்கள் என்பதை அறிந்துதான் அருமை ஆண்டவர் "அழைக்கப்பட்டவர்கள் அநேகர், தெரிந்து கொள்ளப்பட்டவர்களோ சிலர்" என்றும் சொன்னார். அப்போஸ்தலனாகிய பவுலும் தம்முடைய நிருபத்திலே எழுதும் போது "பந்தயச் சாலையில் ஓடுகிறார்கள் எல்லாரும் ஓடுவார்கள். ஆகிலும் ஒருவனே பந்தயத்தை பெறுவான்" (1 கொரியா 9:24,27) என்று அந்த பரலோகம் செல்லும் மக்களின் எண்ணிக்கையை இன்னும் சுருக்கமாக தருகின்றார்.
அதிகாலையில் (5 மணிக்கு)
எனது வீட்டிற்கு அருகில் உள்ள விளையாட்டு மைதானத்திற்கு சென்று கர்த்தரை 30 நிமிடங்கள் சத்தமாக தினமும் கர்த்தரை துதிப்பது எனது பழக்கம். ஒரு நாள் அப்படி துதித்து கொண்டு இருக்கும் போது எனக்கு முன்பாக அந்த இருளில் ஒரு சிறிய உருவம் ஓடிக் கொண்டிருப்பதை நான் கண்டேன். அந்த தம்பியை நிறுத்தி "தம்பி இந்த அதிகாலை நேரத்தில் நீ மைதானத்தை சுற்றி ஓடிக்கொண்டிருப்பது எதற்காக என்றேன் ?" அதற்கு அவன் "எங்கள் பள்ளியில் வருடாந்திர விளையாட்டு போட்டிகள் விரைவில் நடைபெற உள்ளது. அதில் ஒடி வெற்றி பெறுவதற்காக ஒவ்வொரு நாளும் இங்கு ஒடி பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறேன்" என்றான் அவன். "நீ மாத்திரம் தனிமையாக இங்கு வந்து ஒடிக்கொண்டிருக்கின்றாயா ? என்றேன் நான். "நான் மாத்திரம் அல்ல எனது நண்பர்களும் வந்துள்ளனர். அவர்கள் எனக்கு முன்பாக மைதானத்தில் நன்கு ஒடி களைத்துப் போன நிலையில் ஓரத்தில் அமர்ந்துள்ளனர்." என்று கூறினான் அந்த சிறிய பள்ளி மாணவன். கோவை பட்டணத்தில் அன்று முதன் முதலில் அதிகாலை கண் விழித்து எழுந்ததவன் நான் தான் என்று எண்ணிக் கொண்டிருக்க மிகவும் வெட்கத்திற்குரிய காரியம், எனக்கு வெகு நேரத்திற்கு முன்பே பட்டணத்தின் சின்னஞ்சிறார்கள் கண்விழித்தெழுந்து தங்கள் காரியத்தை ஆரம்பித்திருந்தனர்.பள்ளியின் வருடாந்திர விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற அந்த சிறிய மாணவர்களுக்கு அந்த அதிகாலை கண் விழிப்பும், கடினமான பயிற்சிகளும் அத்தனை அவசியமானால் நித்திய காலமாக ஆண்டவர் இயேசுவோடு வாழும் பரலோக இன்ப வாழ்விற்கு நாம் எத்தனை எத்தனையாக நமது அவயங்களை அடக்கி ஒடுக்கி பயிற்சி செய்தல் வேண்டும் என்று நீங்கள் நினைக்கின்றீர்கள்.
வாசிக்கும் அன்பார்ந்த தேவ பிள்ளையே, பரிசுத்தத்தையும் வெற்றி வாழ்க்கையையும் வாஞ்சித்துக் கதறும் ஆத்துமாவே, தினமும் அதிகமான நேரத்தை தேவனோடு செலவிடு. உனது கிறிஸ்த வாழ்வில் பெரிய தேவாசீர்வாதத்தைக் காண்பாய.
உனது அருமையான வாழ்நாட் காலத்தை சோம்பிக் கழித்து முடிவில் பரலோகத்தை எதிர்பார்க்க வேண்டாம். உனது இருதயத்தின் விருப்பம்
ஒருக்காலும் நிறைவேறாது. "சோம்பேறியினுடைய ஆத்துமா விரும்பியும் ஒன்றும் பெறாது" (நீதி 13:4) பரலோக ராஜ்யம் பலவந்தம் பண்ணப்படுகிறது, பலவந்தம் பண்ணுகிறவர்கள் அதைப் பிடித்துக் கொள்ளுகிறார்கள் (மத் 11:12)
No comments:
Post a Comment