பூலோகத்தில் உம்மை தவிர எனக்கு வேறே விருப்பமில்லை - சங் 73:25
ஒரு கிறிஸ்தவன் தனது விலை மதிப்பிட முடியாத நேரத்தையும், தேவன் தந்த கிருபையின் காலத்தையும் தொலைக்காட்சியை பார்ப்பதில் (கிறிஸ்தவ நிகழ்ச்சிகளையும் சேர்த்துத்தான் நான் இங்கு எழுதுகின்றேன்) செலவிடுகின்றான் என்றால் அவன் மறுபடியும் பிறக்கவில்லை என்பதை நாம் சந்தேகத்திற்கு இடமின்றி கண்டு கொள்ளலாம். எந்த ஒரு கிறிஸ்தவனுக்கு ஆண்டவருடைய பரிசுத்த பாதங்களில் அமர்ந்து அவருடைய குரல் கேட்க மனமில்லையோ, எந்த ஒரு கிறிஸ்தவனால் தன் அன்பின் ஆண்டவர் சமூகத்தை வாஞ்சித்துக் கதற முடியவில்லையோ அவன் மறுபடியும் பிறந்த ஒரு கிறிஸ்தவன் அல்லன். தங்களை ஆண்டவருடைய பிள்ளைகள் என்று சொல்லிக் கொள்ளும் அநேகக் கிறிஸ்தவ மக்களுக்குக் கர்த்தருடைய பாதங்களில் சில நிமிடங்கள் கூட ஜெபத்தில் செலவிட முடிவதில்லை. சில மணி நேரங்களை தனி ஜெபத்தில் செலவிடுவது என்பது அவர்களால் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத காரியமாகும். அதின் திட்டமான ஒரே காரணம் அந்த மக்களின் மறுபிறப்பு உண்மையானதல்ல, அவர்கள் தங்கள் பாவங்களுக்காக மனங்கசந்து அழுது பாவ மன்னிப்பின் நிச்சயத்தையும், உலகம் தரக்கூடாத தேவ சமாதானத்தையும் தங்கள் இருதயத்தில் இன்னும் பெற்றுக் கொள்ளவில்லை. நிச்சயமாக கர்த்தர் அவர்கள் இருதயத்தில் பிரவேசித்து தமது ஆளுகையை இன்னும் அவர்கள் உள்ளத்தில் ஸ்தாபிக்கவில்லை என்பதை எந்த ஒரு சந்தேகத்திற்கு இடமின்றி நாம் கண்டு கொள்ள முடியும்.
ஒரு கிறிஸ்தவ சகோதரி பல்லாண்டு காலம் ஆசிரியை பணி செய்து ஓய்வுபெற்ற தனது பழைய பள்ளிக்குத் திரும்பவும் வேலை செய்யச் செல்லுவதை நான் கவனித்தேன். மாதம் ஒன்றுக்கு ரூபாய் 50000 சம்பளம் பெற்று வந்த அவர்கள் மாதம் வெறும் ரூபாய் 4000 க்கு இப்பொழுது வேலை செய்யச் செல்லுவதாகச் சொன்னார்கள். அதின் காரணத்தை நான் அவர்களிடம் கேட்ட போது வீட்டிலே சும்மா இருந்து நேரம் களிக்க தன்னால் முடியவில்லை என்றும், எப்படியாவது தனது நேரத்தை செலவிட்டு நாளை முடிப்பதற்காகச் செல்லுவதாகவும் சொன்னார்கள். எத்தனை பயங்கரம் பாருங்கள்! முடிவில்லாத நித்தியத்தை மோட்சத்தில் ஆண்டவருடன் செலவிடுவதற்கு தனது கடந்த கால பாவத் தவறுகளுக்காக மார்பில் அடித்துப் புலம்பி கண்ணீருடன் ஒவ்வொரு நாளும் கர்த்தருடைய பாதங்களில் விழுந்து கிடக்க வேண்டிய ஆத்துமாவை தந்திர சாத்தான் எங்கே இழுத்துக் கொண்டு செல்லுகின்றான் பாருங்கள். காரணம், அவர்கள் இன்னும் மறுபடியும் பிறக்கவில்லை. ஆண்டவருடைய இரட்சிப்பின் சந்தோசத்தை அவர்கள் இன்னும் பெற்றுக் கொள்ளவில்லை என்பதுதான்.
ஒரு அருமையான கிறிஸ்தவ தாயார் தனது விருத்தாப்பிய நாட்களில் நேரம் போகாமல் தனது வீட்டில் தான் துவைத்து சுத்தம் செய்து போட்ட துணிகளை திரும்பவும் துவைத்து சுத்தம் செய்வதை தான் பார்த்தாக ஒரு சகோதரன் ஒரு சமயம் என்னிடம் சொன்னார்கள்.
மனைவியை இழந்த ஓய்வுபெற்ற கிறிஸ்தவ ஆசிரியர் ஒருவர் தனது ஒவ்வொரு முழு நாளையும் தொலைக்காட்சியில், உலகச் செய்திகள் கிறிஸ்தவ நிகழ்ச்சிகள், உலகச் செய்திகள் கிறிஸ்தவ நிகழ்ச்சிகள் என்று மாற்றி மாற்றி போட்டுப் பார்த்து பார்த்து தனது வாழ்நாளை தொலைக்காட்சி பெட்டிக்கு முன்பாகத் துயரத்துடன் கடத்துவதை அவர்கள் வீட்டில் வேலை செய்யும் வேலைக்காரப் பெண் பார்த்து வந்து மற்றவர்களிடம் சொன்னார்களாம்.
விருத்தாப்பிய கிறிஸ்தவ மக்கள் தங்கள் வாழ்வின் அஸ்தமன நாட்களை பேருந்து நிலையங்கள், இரயில்வே ஸ்டேஷன்கள், பொழுது போக்கு பூங்காக்கள், பொது வாசக சாலைகள் போன்ற இடங்களில் நாள் முழுவதும் அமர்ந்து வீண் பேச்சுகள் பேசி, தங்களுக்கு முன் நடக்கும் உலக நிகழ்ச்சிகளை பார்த்து பார்த்து பாழாக்குவது மிகவும் சர்வ சாதாரண நிகழ்ச்சிகளாகிப் போய்விட்டது.
"உம்முடைய சமூகத்தில் பரிபூரண ஆனந்தமும், உம்முடைய வலது பாரிசத்தில் நித்திய பேரின்பமும் உண்டு" (சங் 16 : 11) என்று சங்கீதக்காரர் சொல்லுகின்றார். தேவ சமூகத்தில் உள்ள பரிபூரண ஆனந்தத்தையும், நித்திய பேரின்பத்தையும் விட்டுவிட்டு கிறிஸ்தவன் உலக மாயையில் தனது விலையேறப்பெற்ற நேரத்தையும், காலத்தையும் நாசப்படுத்துவதன் ஒரே காரணம் அந்த கிறிஸ்தவன் இன்னும் மறுபிறப்பின் பரலோக அனுபவத்தை தனது வாழ்வில் பெற்றுக் கொள்ளவில்லை என்பதுதான்.
No comments:
Post a Comment